மோசடி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: பரிதி இளம்வழுதி மீது வழக்கு பதிய ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வில்லிவாக்கம் தர்மதோப்பு அறக்கட்டளையின் அறங்காவலர் எஸ்.ரங்கா ரெட்டி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் வில்லிவாக்கம் தர்மதோப்பு அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளேன். எங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமாக 7.45 ஏக்கர் நிலம், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, கடந்த 1875ம் ஆண்டு அரசால் வழங்கப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உதவியுடன், அவரது உதவியாளர் காக்கரின் மற்றும் வாசு ஆகியோர் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து அறக்கட்டளையின் 5.5 ஏக்கர் நிலத்தை ஜோஷி என்ற கட்டுமான நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டனர்.
நிலத்திற்கு போலி பட்டா தயாரிக்க தாசில்தாரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த மோசடி குறித்து கடந்த 10.7.2010 அன்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலி பட்டாவை ரத்து செய்யக் கோரி தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளேன்.
இது குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த மோசடியில் பரிதி இளம்வழுதி, அவரது உதவியாளர் காக்கரின், திமுக பிரமுகர் வாசு ஆகியோர் உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே எனது புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இம்மனுவை நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரித்தார். இது குறித்து பதில் அளிப்பதற்கு அரசு தரப்பில் அவகாசம் கேட்டதை அடுத்து மனு மீதான விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications