ஆகாஷ் டேப்லெட் விவகாரம்: சின்னப்புள்ளத்தனமா மோதும் மோடி, சிபல்

மத்திய அரசு, கன்டாவின் டேட்டாவின்ட் நிறுவனத்துடன் சேர்ந்து குறைந்த விலையில் ஆகாஷ் டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஆகாஷ்-2 டேப்லெட்டை டேட்டாவின்ட் நிறுவனத்தின் துணையின்றி மத்திய அரசு தயாரித்துள்ளது. இதற்கிடையே ஆகாஷ் டேப்லெட்டைப் பற்றி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆசிரியர் தினத்தனறு விமர்சித்து பேசினார். அவர் கூறுகையில்,
ஆகாஷ் டேப்லெட்டைப் பற்றி ஆகாய அளவுக்கு பேசினார்கள். ஆனால் அது இன்னும் பூமிக்கு வந்தபாடில்லை. 11 மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த ஆகாஷ் டேப்லெட்டும் பூமிக்கு வரவில்லை. அதற்கு எதற்காக ஆகாஷ் என்று பெயர் வைத்துள்ளார்கள் என்பது எனக்கு இப்பொழுது புரிகிறது என்றார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் மோடிக்கு 2 மேம்படுத்தப்பட்ட ஆகாஷ்-2 டேப்லெட்டை பரிசாக அனுப்பியுள்ளார். அத்துடன் ஒரு கடிதத்தையும் சேர்த்து அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் சிபல் கூறியிருப்பதாவது,
ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆகாஷ் டேப்லெட்டை கடுமையாக விமர்சித்திருப்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. கல்வி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. நாட்டு குழந்தைகளின் நலன் கருதி நாம் பணியாற்ற வேண்டும். தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள ஆகாஷ் சந்தையில் உள்ள படைப்புகளின் தரத்தை ஒப்பிடும்போது நான்கு மடங்கு நன்றாக இருக்கும். மும்பை ஐஐடியில் அந்த டேப்லெட் மேம்படுத்தப்பட்டு தற்போது சந்தைக்கு வந்துள்ளது. அதன் விலை ரூ.2, 276 ஆகும். என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications