மறுபடியும்... கடல் வழியாகப் போய் கூடங்குளம் அணு மின் நிலையம் 8ம் தேதி முற்றுகை!
இடிந்தகரை: கூடங்குளம் அணு மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மறுபடியும் கையில் எடுத்துள்ளனர் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்கள். அக்டோபர் 8ம் தேதி கடல் மார்க்கமாக சென்று அணு மின் நிலையத்தை முற்றுகையிட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே அணு மின் நிலையம் அருகே கடற்கரையில் முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். இதை போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், மறுபடியும் ஒரு முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இடிந்தகரை கிராமத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் திராவிட இயக்க தலைவர் கொளத்தூர் மணி, பாட்டாளி மக்கள் கட்சி துணை பொதுச் செயலாளர் வியனரசு, விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் அமீது, மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன், பெண்கள் முன்னணியைச் சேர்ந்த கிறிஸ்டினா உள்பட 25-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூடங்குளம் ஆதரவு அமைப்புகள், கடலோர மீனவ கிராமங்களின் ஊர் கமிட்டியினர், கேரளாவைச் சேர்ந்த அணு உலை எதிர்ப்பாளர்கள், போராட்டக் குழு நிர்வாகிகள் ஆகியோர் உள்பட சுமார் 200 பேர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். உதயக்குமார் உள்ளிட்ட போராட்டக் குழு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்ட முடிவுகளை உதயக்குமார் வெளியிட்டார். அவர் கூறுகையில்,
இடிந்தகரையில் நடந்த போலீஸ் தடியடியை கண்டித்து மணப்பாடு கிராமத்தில் நடந்த போராட்டத்தில் அந்தோணி ஜான் என்ற மீனவர் பலியானார். அரசு சார்பில் அந்தோணி ஜான் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த மீனவர்கள் அந்தோணி ஜான், சகாயம் ஆகியோர் குடும்பங்களுக்கு வேண்டிய உதவிகளை ஊர் கமிட்டி மூலமே செய்து கொடுக்க முடிவு செய்துள்ளோம். எனவே அந்தோணி ஜான் குடும்பத்துக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரண தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அரசிடம் திரும்ப ஒப்படைப்போம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல் மார்க்கமாக சென்று முற்றுகையிட்டு அக்டோபர் 8-ந் தேதி போராட்டம் நடத்தப்படும். மேலும், ருவாரியான மக்களை திரட்டி அக்டோபர் 29-ந் தேதி சென்னையில் சட்டசபை கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
இந்த அறிவிப்புகளால் கூடங்குளத்தில் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications