காந்தி சிலை முன் ராமதாஸ் தலைமையில் ஒப்பாரி வைக்கப் போகிறார்கள்!

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது :
மதுவே மூலகாரணம்
தமிழ்நாட்டில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளும், சீரழிவுகளும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலேயே சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் தொடர்ந்து பெற்று வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதுதான் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கும் மதுவே மூல காரணமாக திகழ்கிறது. மது பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் விபத்தில் சிக்கியும், உடல் நலம் கெட்டும் உயிரிழப்பது அதிகரித்து வருவதால், இந்தியாவிலேயே தமிழகத்திலும், புதுவையிலும் தான் அதிக எண்ணிக்கையில் கணவனை இழந்த இளம் கைம்பெண்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தலைவர்களின் அறிவுரை
சமுதாயத்தைக் கெடுக்கும் மதுவை தடை செய்ய வேண்டும் என்று மகாத்மா காந்தியடிகள், பெரியார், காமராஜர், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தலைவர்களின் அறிவுரைகளை எல்லாம் மதிக்காத தமிழக அரசு மதுவை கொடுத்து மக்களைக் கெடுக்கும் பாவத்தை செய்து வருகிறது.
தமிழகத்தில் மக்களை காக்க மதுவிலக்கை நடைமுறைபடுத்துங்கள் என்று கோரி கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்திவரும் போதிலும் அதற்கெல்லாம் திராவிடக் கட்சிகளின் அரசுகள் செவி சாய்க்கவில்லை.
ஒப்பாரி போராட்டம்
தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது பற்றிய அறிவிப்பை மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியன்று வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, வரும் அக்டோபர் 1ம் தேதி காலை 10 மணிக்கு காந்தியடிகளின் சிலை முன் கணவனை இழந்த கைம்பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தப்படும்.
சென்னை நினைவரங்கம் அருகில் எனது தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கைம் பெண்கள் பங்கேற்று, அங்கு அமைக்கப்படும் காந்தி சிலை முன் அமர்ந்து, தமிழகத்தில் முழு மது விலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பாரி வைப்பார்கள்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications