மனைவியைக் கொன்று கொதி நீரில் 4 நாட்கள் வேக வைத்து எலும்புக் கூடாக்கிய கணவர்!
லாஸ் ஏஞ்சலெஸ்: கோபத்தில் மனைவியைக் கொலை செய்த கணவர், மனைவியின் உடலை பாய்லரில் போட்டு நான்கு நாட்கள் வேக விட்டுள்ளார். உடல் முழுவதும் வெந்து கரைந்து எலும்புக் கூடாகும் வரை மகா பொறுமையாக பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த அந்த கொடுமைக்கார நபருக்கு லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் வியன்ஸ். 49 வயதான இவர் ஒரு சமையல்காரர். இவரது மனைவி பெயர் டான். கடந்த 2009ம் ஆண்டு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் டேவிட். அப்போது கோபத்தில் மனைவியைக் கொலை செய்து விட்டார். பின்னர் ஆத்திரம் தணியாத அவர் வீட்டில் இருந்த பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்தார். அதன் பின்னர் மனைவியின் உடலைத் தூக்கி அதில் போட்டுள்ளார். அடுப்பில் ஏதோ கறியை வேக வைப்பது போல நான்கு நாட்கள் கொதி நீரில் மனைவி உடலைப் போட்டு வேக விட்டார். இதனால் டானின் உடல் வெந்து, கரைந்து போய் எலும்புக் கூடாகி விட்டது. அதன் பின்னர் அடுப்பை ஆப் செய்துள்ளார் இந்த கொடூர மனிதர்.
இதையடுத்து டேவிட் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் நிறுத்தினர். கோர்ட்டில் தனது மனைவியைக் கொன்று அடுப்பில் வேக வைத்ததை ஒத்துக் கொண்டார் டேவிட். மேலும் தனது மனைவியின் உடல் நன்றாக கரைந்து போகும் வகையில் நான்கு நாட்கள் வரை அடுப்பிலேயே வைத்திருந்ததாகவும் அவர் சலனமே இல்லாமல் கூறினார்.
அவரது வாக்குமூலத்தைக் கேட்டவர்கள் ஆடிப் போய் விட்டனர். இந்த நிலையில் டேவிட் வியன்ஸின் கொடுமையான செயலை எந்த வகையான கொலையில் சேர்ப்பது என்பதில் நீதிபதிகளுக்கே குழப்பமாகி விட்டது. இது திட்டமிட்ட படுகொலையா அல்லது தற்செயலாக நடந்ததா அல்லது பழிவாங்குதலா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இதனால் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு பின்னர் டேவிட் வியன்ஸ் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பளித்தனர்.
டேவிட்டும், அவரது மனைவியும் 20 வருடம் சேர்ந்து வாழ்க்கை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.