'சைட்' அடிக்கும் கணவர்...விவாகரத்து கோரிய பெண், சமரசப்படுத்திய கோர்ட்!
ரஸ் அல் கைமா: தனது கணவர் வெளியில் போகும்போது போகிற வருகிற பெண்களையெல்லாம் உற்று உற்றுப் பார்க்கிறார். இதனால் எனக்கு மன வேதனை ஏற்படுகிறது. எனவே அவரிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ரஸ் அல் கைமா குடும்ப நல கோர்ட்டை அணுகியுள்ளார் ஒரு பெண். இருப்பினும் கணவர் திருந்த இன்னொரு வாய்ப்பு தருமாறு அந்தப் பெண்ணுக்கு கோர்ட் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து தனது மனுவை அவர் திரும்பப் பெற்றார்.
ரஸ் அல் கைமாவைச் சேர்ந்த 30 வயது அரபுப் பெண் குடும்ப நல கோர்ட்டில் ஒரு மனு செய்தார். அதில், நான், எனது பிள்ளைகள், கணவருடன் வெளியே எங்காவது போகும்போது சாலையில் வருகிற, போகிற பெண்களையெல்லாம் எனது கணவர் உற்றுப் பார்க்கிறார். இதை விட்டு விடுங்கள், உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவரிடம் பலமுறை கோரியும் அவர் நிறுத்துவதாக இல்லை. இது எனக்கு மன வேதனை தருகிறது. எனவே அவரிடமிருந்து விவாகரத்து தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தினர். கணவர் திருந்த ஒரு வாய்ப்பு தருமாறும், குழந்தைகள் நலனைக் கருத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். இதையடுத்து தனது குழந்தைகள் நலனுக்காக கணவருடன் சேர்ந்து வாழ சம்மதிப்பதாக கூறி அந்தப் பெண் தனது மனுவைத் திரும்பப் பெற்றுச் சென்றார்.
ஆனால் தனது மனைவியின் புகாரை கணவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது அவரது தேவையில்லாத கற்பனையாகும். எனது மனைவிக்குப் பொறாமை குணம் அதிகம் உள்ளது. நான் வெளியே போகும்போது ரோட்டில் போகிற பெண்கள் எல்லாம் என்னைத்தான் பார்ப்பதாக அவர் கருதுகிறார். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றார்.