கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இழுக்க நாம் மதசார்பற்றவர்கள் என்பதை காட்ட வேண்டும்: அத்வானி

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹரியாணா மாநிலம் சூரஜ்குண்டில் கடந்த மூன்று நாளாக நடந்தது. இதில் இறுதி உரையாற்றிய அத்வானி எழுதி வைத்துப் பேசியதாவது:
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாது; அதற்குள் கவிழ்ந்துவிடும். நோயாளியைப் போல் நோய்வாய்ப்பட்டுள்ள மத்திய அரசு, அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்ஸிஜன் பொருத்திய நிலையில் உள்ளது.
காங்கிரஸ் கூட்டணி அரசு புலனாய்வு அமைப்பான சிபிஐயுடன் உடன் மட்டுமே நிலையான கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளது. 2014ம் ஆண்டு வரை ஆட்சியை தொடர சிபிஐ அமைப்பை மத்திய அரசு நம்பியுள்ளது.
ஐ.சி.யூவில் இருக்கும் ஆட்சி நீண்டநாள் நிலைக்காமல் சீக்கிரமே கவிழ்வதே நல்லது என்று ஆளும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளே நினைக்க தொடங்கிவிட்டன. அதற்கான முயற்சியில் கூட்டணி கட்சிகள் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால், இன்னும் ஓராண்டுக்குள் ஆட்சி கவிழ்ந்து மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடப்பது உறுதி.
செயல்படாதவராக பிரதமர் மன்மோகன் சிங் உள்ளார் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதைச் சொல்ல நான் மிகவும் மனம் வருந்துகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக கட்சித் தலைவர் நிதின் கட்கரியுடன் ஏற்கெனவே ஆலோசனை செய்துவிட்டேன்.
இப்போது நம்முடைய கூட்டணிக்கு புதிய கட்சிகளைக் கொண்டு வர வேண்டியது அவசியம். நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) 'தேசிய ஜனநாயகக் கூட்டணி பிளஸ்' ("NDA Plus") என்ற நிலைக்கு விரிவாக்க வேண்டும். இதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
நம்முடன் கூட்டணி அமைப்பதால் தங்களது மதசார்பற்ற நிலைக்கு பிரச்சனை வரும் என சில கட்சிகள் கருதுகின்றன. அவர்களது அச்சத்தை போக்கும் வகையில், மதசார்பின்மைக்கு நாமும் எதிரிகள் அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் கட்சியின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
சிறுபான்மை இனத்தினருக்கு நாம் எதிரிகள் அல்ல, இதுவரை எந்த அநீதியையும் செய்யவில்லை என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
முதலில் பா.ஜனதா தலைவர்கள் பல குரலில் மாறுபட்டுப் பேசக் கூடாது. அனைவரும் ஒரே கருத்தையே வலியுறுத்த வேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல கட்சிகளை சேர்த்து பெரிதாக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி மதச்சார்பின்மையை பின்பற்றுவதை உறுதிப்படுத்தி நமைப் பற்றிய அச்சத்தை அகற்ற வேண்டும். இப்படி செயல்பட்டால் 1998, 1999-ம் ஆண்டுகளைவிட கூடுதல் இடங்களைக் கைப்பற்றலாம்.
இஸ்லாமுக்கு எதிரான அமெரிக்கத் திரைப்படம் இன்னும் இன்டர்நெட்டில் வலம் வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. நபிகள் நாயகத்தை தவறாகக் காட்டும் அந்தப் படத்தை ஏற்கவே முடியாது. எந்த மதமாக இருந்தாலும் அதன் புனிதத் தலைவர்களை கீழ்த்தரமாக சித்தரிப்பது தவறு என்றார் அத்வானி.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக இரண்டுக்குமே தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டி கிடைக்காது என்றே கூறப்படுகிறது. இதனால் திமுக, அதிமுக, சமாஜ்வாடி கட்சி, பிஜூ ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெறும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்று தெரிகிறது.
ஆனால், பாஜகவின் மதவாத நிலை காரணமாக இதில் அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகள் பாஜகவுடன் கூட்டணிக்குத் தயாராக இல்லை.
இந் நிலையில் தான் கூட்டணிக்குள் இந்தக் கட்சிகளில் சிலவற்றையாவது இழுத்தால் தான் அடுத்த ஆட்சி சாத்தியம் என்பதை பாஜக உணர்ந்துள்ளது. இதுவே அத்வானியின் இந்தப் பேச்சில் எதிரொலித்துள்ளது.












Click it and Unblock the Notifications