மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பதில்லை: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி: தமிழகத்தில் நுழைவுத்தேர்வு என்பதை ஒழித்த பிறகும், மருத்துவ கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத்தேர்வினை திணிக்க இருப்பதைப் பற்றி?
பதில்: தமிழகத்தில் நுழைவுத்தேர்வு முறையை ஒழித்தது தி.மு.க. ஆட்சிதான் என்பதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். ஆனால் மருத்துவ கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத்தேர்வினை நடத்தப்போவதாக செய்திகள் வருகின்றன. அதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, நுழைவுத்தேர்வு முறையை அறவே ஒழிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் நமது கருத்து.
கேள்வி: தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர் வேணுகோபால், வடசென்னை, வல்லூர், மேட்டூர் ஆகிய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து இன்னும் ஆறு மாதத்தில் 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: அந்த மூன்று திட்டங்களையும் தி.மு.கழக ஆட்சியில் தொடங்கியதால்தானே, இன்னும் ஆறு மாதத்தில் 3000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கவுள்ளது. தி.மு.க ஆட்சியில் மின் திட்டங்களையே தொடங்கவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுப்போருக்கு, வேணுகோபால் உரை நல்ல பதிலாக அமையும்.
கேள்வி: தமிழகத்தில் பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து நான்கு மாதங்களாகியும் தாமதமாவதாக சொல்லப்படுகிறதே?
பதில்: தமிழகத்தில், கடலூர், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், 256 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் "பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம்'' அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டம் தொடர்பாக முதற்கட்டமாக, தமிழக தொழில் துறை மற்றும் ரசாயன துறையுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டும்.
அதுவே திட்டம் தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை. ஆனாலும் அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்களாகி விட்ட நிலையில், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்தியில் இந்த திட்டத்தை அமல்படுத்தும் துறை, கழக அமைச்சர் மு.க.அழகிரியின் வசம் இருப்பதால் தமிழக அரசு தாமதப்படுத்துகிறதோ என்று ஒரு காரணம் கூறப்படுகிறது.
இந்த மண்டலம் அமைந்தால், ஏறத்தாழ எட்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் அரசியல் காரணமாக தமிழக அரசு இதில் அக்கறை காட்டாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதைப்போலவே, தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மிகப்பெரிய துறைமுகங்களை அமைப்பது என மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக, உரிய விவரங்களை அளிக்கும்படி, மாநில அரசுகளிடம், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கேட்டிருந்தது. நான்கு மாதங்களாகியும் இதற்கான முறையான பதில் எதுவும், தமிழக அரசிடமிருந்து, மத்திய அரசுக்கு வந்து சேரவில்லை என்றும், இது குறித்து கடிதம் எழுதி கேட்டும்கூட, உரிய பதில் தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஆந்திராவில், ஓங்கோல் என்ற இடத்தில், மிகப்பெரிய துறைமுகம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கிவிட்டன என்று அதில் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications