கன்னட அமைப்புகள் போராட்டம்: முன்னெச்சரிக்கையாக தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அதை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. உச்சநீதிமன்றமும் பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணைய உத்தரவை நடைமுறைப்படுத்த உடனே காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று காட்டம் காட்டியுள்ளது.
இதனிடையே காவிரி நீரை தமிழகம் கோரியது முதல் மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் கன்னட அமைப்பினர் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழக - கர்நாடக எல்லையில் தமிழகத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி எல்லை வழியாக கர்நாடகம் செல்லக் கூடிய அனைத்து தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களும் தமிழக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் ஏதேனும் நடந்துவிடக் கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் எல்லையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் எல்லையில் பதற்றமான நிலைமை காணப்படுகிறது.
அதே நேரத்தில் ஒசூர் வழியாகச் செல்லும் தமிழக வாகனங்கள் பெங்களூருக்குள் சென்று வந்து கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications