வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் இன்று மழை
சென்னை: வங்க கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாலும், வெப்ப சலனம் காரணமாகவும், இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை செய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த புதன்கிழமை சென்னையில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் வங்க கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாலும், வெப்பசலனம் காரணமாகவும் இன்று தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது,
வங்க கடலில் ஆந்திர மாநிலத்தையெட்டிய பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்பச்சலனம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்யலாம். சில இடங்களில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று உளுந்தூர்பேட்டையில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆலங்குடி, முதுகுளத்தூர், பரமக்குடி, தாழவாடி ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும், ஒரத்தநாட்டில் 6 செ.மீ. மழையும், லால்குடி, கந்தர்வக்கோட்டை, அரிமளம், திருச்செங்கோடு தலா 5 செ.மீ மழையும் பதிவானது.
தம்மம்பட்டி, சங்ககிரி, காரைக்குடி, கீரனூர், பெருங்களூர், சாத்தனூர் அணை, தருமபுரி, அஞ்சட்டி, பரூர், கரூர் பரமத்தி, தாராபுரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழையும், விருத்தாசலம், பாம்பன், ராமேஸ்வரம், ஓமலூர், திருப்புவனம், போளூர், செங்கம், பாப்பிரெட்டிப்பெட்டி, திருவையாறு, சமயபுரம், மருங்காபுரி, புள்ளம்பாடி, பெருந்துறை, புதுக்கோட்டை, வாணியம்பாடி, சூளகிரி தலா 3 செ.மீ மழையும் பதிவானது என்றார்.












Click it and Unblock the Notifications