சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு.. எதிர்த்து யார் தீர்மானம் கொண்டு வந்தாலும் ஆதரவு- திமுக அறிவிப்பு

திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்தது திமுக.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கருணாநிதி. அப்போது மத்திய அரசுக்கு அதிர்ச்சி தரும் வகையிலான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் யார் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை திமுக ஆதரிக்கும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், அதேசமயம், இந்த நிலைப்பாட்டால், காங்கிரஸுடனான எங்களது உறவில் எந்த மாற்றமும் இருக்காது, பாதிப்பு ஏற்படாது.
பல்வேறு பிரச்சினைகளில் எங்களது கருத்துக்களையும்,நிலைப்பாட்டையும் அவ்வப்போது மத்திய அரசிடம் தெரிவித்து வந்துள்ளோம்.
சமீபத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் சாதாரண மக்களைக் கடுமையாக பாதிக்கக் கூடியவையாக உள்ளன. எனவே இவற்றை பிரதமர் மன்மோகன் சிங் மறு பரிசீலனை செய்வார் என்று நம்புகிறேன் என்றார் கருணாநிதி.
ஏன் காங். கூட்டணி அரசை ஆதரிக்கிறோம்?
இத்தனைப் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஏன் திமுக தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்க வேண்டும் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, மதவாத சக்திகள் மத்தியில் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற காரணத்திற்காகத்தான் ஆதரிக்கிறோம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications