ராமநாதபுரத்தில் கொடூரம்... 6 பேர் குடிசையோடு தீவைத்து எரித்துக் கொலை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இடத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர்.
மண்டபம் அருகே உள்ள தோப்பு வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் கள்ளழகர். மீனவரான இவர் துபாயில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி காளிமுத்து, வயது 35. இந்தத் தம்பதிக்கு 12 வயதில் காளீஸ்வரி, 8 வயதில் பாலமுருகன், 7 வயதில் சரண்யா, 2 வயதில் சத்திபாலா என்று நான்கு குழந்தைகள் இருந்தனர்.
காளிமுத்து தனது 4 குழந்தைகளுடன் தோப்பு வலசை கடற்கரை பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். அவர்களின் பாதுகாப்புக்காக காளிமுத்துவின் தந்தை கருப்பையாவும் அங்கேயே தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று இரவு காளிமுத்துவும் குழந்தைகளும், கருப்பையாவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் ஒரு கும்பல் அங்கு வந்தது. குடிசை மீது பெட்ரோல், மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து விட்டனர். உள்ளேயிருந்து யாரும் வெளியே வந்து விடக் கூடாது என்பதற்காக வீட்டின் வெளியே பூட்டி விட்டனர்.
அது குடிசை வீடு என்பதால் தீ மளமளவென வேகமாகப் பரவியது. பற்றி எரிந்த வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட காளிமுத்துவும் குடும்பத்தினரும் தீயில் கருகித் துடித்தனர். தப்பித்து வெளியே வர முடியாமல் அவர்கள் குடிசைக்குள்ளேயே அங்குமிங்கும் ஓடி மிகக் கொடூரமாக சிறிது நேரத்தில் உயிரிழந்து கரிக்கட்டையாகிப் போனார்கள்.
காலை 8 மணியளவில் அந்தப் பகுதி வழியாக வேலைக்குச் சென்ற சில தொழிலாளர்கள் குடிசை எரிந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் போய்ப் பார்த்தனர். அப்போது அங்கு 6 பேர் கரிக்கட்டையாகி பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியுற்ற அவர்கள் உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
டிஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும், போலீஸாரும் விரைந்து வந்தனர். 6 பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால் உடல்கள் கருகிப் போய் விட்டதால் டாக்டர்கள் சம்பவ இடத்திற்கே வந்து பிரேதப் பரிசோதனையை நடத்தினர்.
இடத் தகராறுதான் இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. காளிமுத்து வசித்து வந்த இடத்திற்கு அருகே உச்சிப்புளியைச் சேர்ந்த 2 பேர் இடம் வாங்கியுள்ளனர். அவர்கள் காளிமுத்து வசித்து வந்த இடம் தங்களுக்கேச் சொந்தம் என்று உரிமை கோரி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அடிக்கடி காளிமுத்து மற்றும் கருப்பையாவிடம் அவர்கள் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸிலும் கூட வழக்கு உள்ளது. எனவே இந்த உச்சிப்புளி கோஷ்டியினர்தான் ஆட்களை வைத்துக் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications