திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை கணவர் மீது நிலமோசடி புகார்!
நெல்லை: திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதையின் கணவர் மீது ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலமோசடி புகாரை நெல்லையை சேர்ந்த விவசாயி ஒருவர் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்துமாறு, நெல்லை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த சிவலார்குளம் வடக்கூரை சேர்ந்தவர் முருகன்(40). விவசாயி. இவர் நேற்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன்பிறகு நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜிடம் ஒரு மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே சிவலார்குளத்தில் எனக்கு 1.15 ஏக்கர் (சர்வே என் 840-3, 840-17) விவசாய நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இந்த நிலத்தை முன்னாள் திமுக அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவின் கணவரான, சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 10வது குறுக்குத் தெருவை சேர்ந்த டாக்டர் பாலாஜி என்பவர் எனது சொத்தை, பாத்தியம் இல்லாதவர்களிடம் கிரையம் வாங்கி போலி பத்திரம் தயாரித்து கடந்த 2007ம் ஆண்டு மோசடி செய்தார்.
கடந்த திமுக ஆட்சியின் போது இந்த நிலமோசடி தொடர்பாக கடந்த 1.11.2010ல் நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தேன். ஆனால் எனது மனு மீது காவல்துறை அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் எனது விவசாய நிலத்தில் உழவு பணி மேற்கொள்ள நான் சென்ற போது, திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவின் கணவர் பாலாஜி மற்றும் அவரது ஆட்களும் சோந்து என்னை கொலை செய்யாமல் விடமாட்டோம் என்று மிரட்டினர். மேலும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
எனவே டாக்டர் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு தந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் செல்வராஜ், மாவட்ட காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார். கடந்த திமுக ஆட்சி காலத்தில் தனது உறவினர் ஒருவருக்காக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா லஞ்ச ஒழிப்புத்துறைக்கு போன் செய்து ஆதாயம் தேட முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்து தனது பதவியை இழந்தவர் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications