மோடிக்கு எதிராக திரும்பிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட்டின் சஸ்பெண்ஷன்-ஒரு வழக்கில் ரத்து

இருப்பினும் மேலும் 2 வழக்குகளில் சஞ்சய் பட்டுக்கு எதிரான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்வதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தில் வெடித்த பெரும் இனக்கலவரத்தில் ஆயிரத்திற்கும மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் பட் ஒரு அபிடவிட்டைத் தாக்கல் செய்தார். அதில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக முக்கியத் தகவலை அளித்திருந்தார். இதையடுத்து பட் மீது மூன்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி மோடி அரசு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சஸ்பெண்ட் செய்தது.
சட்டவிரோதமாக பணிக்கு வராமல் இருத்தல், துறை ரீதியிலான விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகத் தவறியது, அரசு வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது ஆகிய காரணங்களைக் காட்டி பட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது போக அவர் மீது 3 வழக்குகளும் போடப்பட்டன.
இந்த நிலையில் சஞ்சய் பட் மீதான ஒரு நடவடிக்கையை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த வழக்கில் அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற இரு வழக்குகளும் தொடர்வதாகவும், அதில் சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்வதாகவும் குஜராத் மாநில முதன்மை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.நந்தா கூறியுள்ளார்.
தன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து சஞ்சய் பட் மனு ஒன்றை மத்திய மறு ஆய்வுக் கமிட்டியிடம் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஆகஸ்ட் 6ம் தேதி மறு ஆய்வுக் கமிட்டி பரிசீலனை செய்தது. அப்போது, சஞ்சய் பட் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ஒரு வருடத்திற்கு மேலும் நீ்டிக்கத் தேவையில்லை என்று மத்திய உள்துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து ஒரு வழக்கில் மட்டும் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி அந்த வழக்கில் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்தாகியுள்ளது.
பட் மீது ஏற்கனவே இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனக்குக் கீவ் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவரை கட்டாயப்படுத்தி, போலியான அபிடவிட்டைத் தாக்கல் செய்ய வைத்ததாக ஒரு கிரிமினல் வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கைதாகி 6 நாள் போலீஸ் காவலிலும் பட் வைக்கப்பட்டிருந்தார். இதேபோல அதிகார வரம்புக்கு மீறி ஆயுதங்களை வைத்திருந்ததாக ஒரு வழக்கும் அவர் மீது உள்ளது.
மோடிக்கு எதிராக என்ன செய்தார் பட்?
குஜராத் கலவரத்தின்போது குஜராத் மாநில உளவுப் பிரிவின் கூடுதல் துணை ஆணையராக பதவி வகித்து வந்தார் பட். மேலும் நரேந்திர மோடி வீட்டில் கலவரத்திற்கு முன்பு கூடிய கூட்டத்தின்போதும் பட் உடன் இருந்தார். அப்போது குஜராத் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தாமல் விடுமாறும், இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்கும்படியும் காவல்துறை உயர் அதிகாரிகளை மோடி அறிவுறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார் பட். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த அபிடவிட்டிலும் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications