பொது நுழைவு தேர்வை எதிர்த்து டாக்டர்கள் இன்று மனித சங்கிலி போராட்டம்!
சென்னை: மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவு தேர்வு நடத்துவதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் டாக்டர்கள் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மருத்துவ படிப்புக்கு தேசிய அளவில் தகுதி நுழைவு தேர்வை (என்.இ.இ.டி.), மத்திய அரசு நடத்த உள்ளது. இதனால், தமிழகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனி ஆகிவிடும்.
தேசிய அளவில் எம்.பி.பி.எஸ், எம்.டி., எம்.எஸ். மற்றும் டிப்ளமோ சீட்களை அதிக அளவில் தமிழகம் வைத்துள்ளது. இந்த நுழைவு தேர்வினால் நிறைய சீட்களை தமிழகம் இழக்க நேரிடும்.
எனவே எங்கள் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் அக்டோபர் 3ம் தேதி பகல் 2 மணிக்கு சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய மருத்துவக் கல்லூரிகளில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications