காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது கர்நாடகாவின் கடமை: ஜி.கே.வாசன்
சென்னை: காவிரி நதி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது கர்நாடக அரசின் ஜனநாயக கடமை ஆகும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தேச தந்தை மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகிய தலைவர்களின் உருவப்படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி. தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர், பூவராகன், முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, மகிளா காங்கிரஸ் தலைவி சாய்லட்சுமி, சரஸ்வதி நாலடியார், வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், டி.யசோதா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், மயிலை சி.பெரியசாமி, சென்னை மாவட்ட தலைவர்கள் ராயபுரம் மனோ, வெங்கட், கோவிந்தசாமி மற்றும் சவுந்தர் முருகன், கோபண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் அனைவரும் மகாத்மா காந்தி பிறந்தநாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவது கர்நாடக அரசின் கடமை ஆகும் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது கனவை நனவாக்கும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 4 கோடி பேர் பயன் அடைகிறார்கள்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மீது அவதூறாக குற்றச்சாட்டி உள்ளார். வருகிற தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் உறுதியாக உள்ளனர். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு பிரச்சனையில், பாஜக இரட்டை வேடம் போடுகிறது.
பருவ மழை பொய்த்துவிட்ட நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாய பயிர்கள் வாடிப்போய் கிடக்கின்றன. இதனால் இடைக்கால நன்மையாக, உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது. இதை அமல்படுத்த வேண்டியது கர்நாடக அரசின் ஜனநாயக கடமை ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications