எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்! எதிரிக்கு எதிரி நண்பன்.. PRO DMK எடப்பாடி! அதிமுக அதிருப்தி!
சென்னை: தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக திமுக - அதிமுக என்ற இரு பெரிய கட்சிகளின் நேரடி மோதல் தான் பிரதான அரசியல் களமாக இருந்து வந்தது. ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தவெகவின் எழுச்சியால் தமிழக அரசியல் சூழல் மாறியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறை அக்கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் மறைமுகமாக திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடப்பாடி எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்களே கூறி வருகின்றனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2வது பெரிய எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் அதிமுக, ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

குறிப்பாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, மின்வெட்டு, போன்ற விவகாரங்களில் எடப்பாடி தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு அரசை விமர்சிக்கிறார். ஆனால், இந்த அறிக்கைகளில் முன்னாள் ஆளுங்கட்சியான திமுக மீது விமர்சனங்கள் இடம்பெறவில்லை என்பதை அதிமுக நிர்வாகிகளே சுட்டிக் காட்டுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
தற்போது அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் மற்றும் முன்னாள் முக்கிய பிரமுகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே அவர் தனது அரசியல் தாக்குதல்களை முழுமையாக தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மட்டுமே திருப்பியுள்ளதாக சிலர் கருதுகின்றனர். அதே நேரத்தில், தற்போதைய பல பிரச்சினைகளுக்கு முந்தைய திமுக ஆட்சியின் கொள்கைகள் மற்றும் நிர்வாக முடிவுகளும் ஒரு காரணம் என்ற வாதத்தையும் கட்சியின் ஒரு பகுதி நிர்வாகிகள் முன்வைக்கின்றனர்.
அதிமுக அதிருப்தி
எனவே, ஆளுங்கட்சியை மட்டும் அல்லாமல் திமுகவையும் விமர்சிக்க வேண்டும் என்ற கருத்து அதிமுகவுக்குள் வலுத்து வருகிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த தீர்மானத்தில் இடம்பெற்ற சில மாற்றங்களுக்கு திமுக தான் காரணம் என அதிமுக தரப்பில் கூறப்பட்டாலும், அதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி திமுகவை நேரடியாக குற்றம்சாட்டவில்லை என்று கட்சிக்குள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திமுக ஆதரவு
தமிழகத்தின் நீண்டகால உரிமை பிரச்சினையாக பார்க்கப்படும் மேகதாது விவகாரத்தில் கூட திமுகவை விமர்சிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக உருவான காலம் முதல் திமுக எதிர்ப்பே அதன் முக்கிய அரசியல் அடையாளமாக இருந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து அரசியல் களத்தில் எதிர்கொண்டனர்.
தீய சக்தி திமுக
"தீய சக்தி திமுக" என்ற அரசியல் கோஷமே அதிமுகவின் அடையாளங்களில் ஒன்றாக பல ஆண்டுகள் இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த உடல் மொழி மாறி வருவதாகவும், திமுக மீதான தாக்குதல் குறைந்துள்ளதாகவும் கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தேர்தலுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இருந்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
2026 தேர்தல்
அந்த குற்றச்சாட்டை அதிமுக அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தாலும், தற்போது திமுகவை விமர்சிக்காத நிலை அந்த சந்தேகத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 2026 தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட பிறகு, அதிமுக தனது அரசியல் அடையாளத்தை மீண்டும் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருபுறம் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்க்க வேண்டிய நிலை, மறுபுறம் திமுக எதிர்ப்பையும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என இரட்டை சவால்களை அதிமுக சந்தித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி ஏன் தனது அரசியல் தாக்குதலை முழுமையாக தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மட்டுமே குவித்து வருகிறார் என்ற கேள்வி கட்சிக்குள் தொடர்ந்து எழுந்து வருகிறது. திமுக எதிர்ப்பு அரசியலை குறைத்து, ஆளுங்கட்சியை மட்டுமே எதிர்க்கும் தற்போதைய அணுகுமுறை அதிமுகவுக்கு அரசியல் பலன் தருமா அல்லது கட்சியின் தொண்டர்களிடம் குழப்பத்தை உருவாக்குமா என்பது போக போக தெரியும்.












Click it and Unblock the Notifications