பள்ளி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.. மாணவ மாணவியர் தப்பினர்
நெல்லை: திருநெல்வேலி அருகே தென்கலம் என்ற ஊரில் மாணவ, மாணவியருடன் வந்த பள்ளி வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவமாக அத்தனை பேரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். இதனால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.
தென்கலம் கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் அங்குள்ள ஒரு வேன் மூலம் தாழையூத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று படித்து வருகிறார்கள். நேற்று காலாண்டு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து நேற்று காலை மாணவ, மாணவியர் வேனில் பள்ளிக்குக் கிளம்பினர்.
கீழ தென்கலம் கிராமப் பகுதியில் வேன் வந்தபோது திடீரென அதிலிருந்து கரும்புகை கிளம்பியது. இதையடுத்து டிரைவர் வேனை உடனடியாக நிறுத்தினார். அப்போது பார்த்து வேனில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து டிரைவரும், ஊர் மக்களும் சேர்ந்து வேனில் இருந்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை கீழே இறக்கி விட்டனர்.
அடுத்த சில விநாடிகளில் வேனில் பிடித்த தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. இதையடுத்து தண்ணீர் ஊற்றி ஊர் மக்களே தீயை அணைத்தனர். வேன் முழுமையாக எரிந்து போய் விட்டது.
நல்ல வேளையாக எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அனைத்து மாணவ, மாணவியரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.
வேனிலிருந்து விழுந்த மாணவி
இதற்கிடையே, பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அப்பள்ளியின் வேனில் சென்று கொண்டிருந்தனர். நெல்லை வண்ணார்பேட்டையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த வாகனத்தின் கதவு திறந்தது.
இதில் வாகனத்தில் பயணம் செய்த அக்ஷாய் இவாஞ்சல் என்ற 16 வயது மாணவி அதில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications