மதுரை முத்தூட் ஃபின்கார்ப் நிறுவன மேலாளர்களை கடத்தி ரூ.10 கோடி நகைகள் கொள்ளை
மதுரை: மதுரையில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப் நிதி நிறுவனத்தில் இருந்து 37 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு 10 கோடி ரூபாய் என்பதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் "முத்தூட் ஃபின்கார்ப்'' என்ற நிதிநிறுவனத்தின் கிளை உள்ளது. இங்கு தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெறுவது, கடன் வாங்குவது மற்றும் பல்வேறு பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.
இந்த நிறுவனத்தில் விளாங்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மேலாளராகவும், மஞ்சணக்காரத்தெருவை சேர்ந்த சதீஷ் என்பவர் துணை மேலாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு பாலசுப்பிரமணியனும், சதீசும் நிறுவனத்தை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.
நிர்வாகிகள் கடத்தல்
அப்போது சதீஷ் செல்போனிற்கு போன் செய்த ஒரு பெண் நகை அடகு வைப்பது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி மாட்டுத்தாவணி பகுதிக்கு அழைத்துள்ளார். அதை நம்பிய சதீஷ் மாட்டுத்தாவணி சென்றபோது வேனில் வந்த மர்மகும்பல் சதீசை கடத்தியது. இதேபோல் பாலசுப்ரமணியத்தையும் கடத்திய மற்றொரு கும்பல் இருவரிடம் இருந்தும் லாக்கர் சாவியை வாங்கிக்கொண்டு ஒரு வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
இதன்பின்னர் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மீண்டும் வந்த மர்மமனிதர்கள், பாலசுப்பிரமணியன், சதீஷ் ஆகிய இருவரையும் வேனில் ஏற்றிக்கொண்டு கூடல்நகர் பகுதியில் உள்ள ஒரு கண்மாய் பகுதியில் தள்ளிவிட்டுச் சென்றனர். இதனையடுத்து நடந்த சம்பவம் குறித்து இருவரும் கூடல்புதூர் போலீசில் புகார் செய்து நடந்த விவரங்களை தெரிவித்தனர். அவர்கள் கரிமேடு போலீசில் புகார் செய்யும்படி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இருவரும் கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் செய்தனர்.
ரூ.10 கோடி நகைகள் கொள்ளை
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பெங்களூரில் உள்ள லாக்கர் சாவியை எடுத்துக்கொண்டு வந்து நகைகளை சோதனை செய்தனர். அப்போது வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 37 கிலோ 700 கிராம் எடையுள்ள தங்க நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.
வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் காவலாளி சுப்பையா சாப்பிடச் சென்றபோது நிறுவனத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
புகார் கொடுத்தவர்கள் மீது சந்தேகம்
சம்பவ இடத்தை பார்வையிட்ட உயர் அதிகாரி ஒரே நேரத்தில் 37 கிலோ 700 கிராம் நகைகள் கொள்ளை போயிருப்பதால் புகார் கொடுத்தவர்களின் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்தார். ஏனெனில் நிதிநிறுவனம் இருக்கும் இடம் மெயின் ரோடு பகுதியில் உள்ளது. எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். அப்படி இருக்கும் போது இந்த கொள்ளை சம்பவம் அரை மணி நேரத்தில் நடந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களுக்கு உடந்தையாக காவலாளி இருந்திருக்கலாம். எனவே, மேலாளர், துணை மேலாளர், காவலாளி ஆகியோர் மீது சந்தேகம் உள்ளதால் அவர்களை விசாரணை செய்ய இருப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications