திட்டமிட்டபடி நாளை கூடங்குளத்தை முற்றுகையிடுவோம்- உதயக்குமார்
கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டம் நாளை திட்டமிட்டப்படி நடக்கும் என போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.
கூத்தன்குழியில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அணு மின் நிலையத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டம் நாளை 8ம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை.
அணு மின் நிலைய பகுதிக்கு 500 மீட்டர் முன்னதாகவே எங்களது படகுகளை நிறுத்தி முற்றுகை செய்வோம். எவ்வித வன்முறையிலும் ஈடுபடமாட்டோம். இப்போராட்டத்தில் பெண்களும் பங்கேற்பார்கள்.
எங்களது போராட்டம் குறித்து இணையதளத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறிய கருத்துகளை கண்டித்து அவரது எனது உருவ பொம்மையை எரித்து வருகின்றனர்.
அணு உலையை குறித்து பேச சரத்குமார் என்னுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா, என்று கேட்டேன். அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. இதுபற்றி எதுவும் தெரியாமல் அவரது கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் யுரேனியம் நிரப்பி விட்டதாக ஒரு சில அதிகாரிகள் கூறுகிறார்கள். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் யுரேனியம் நிரப்ப 3 மாதம் ஆகும் என்றும், மின் உற்பத்தி செய்ய 1 வருடம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதில் வெவ்வெறு கருத்துகளை அதிகாரிகள் தெரிவித்து வருவதால் யார் சொல்வது உண்மை என்பது தெரியவில்லை. இதனை அதிகாரிகள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார் உதயக்குமார்.












Click it and Unblock the Notifications