காவிரி நதிநீர் விவகாரம்: நெய்வேலியில் தி.க. அக்.15-ல் போராட்டம்
சேலம்: காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நெய்வேலியில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் உரிமை பிரச்சார நிகழ்ச்சியில் கி. வீரமணி பேசியதாவது:
தமிழகத்தில் மிக முக்கிய பிரச்சினைகளில் காவிரி நீர் பிரச்சினையும் ஒன்றாகும். 2 நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட நதிநீர் பங்கீடு பிரச்சினை ஒரு சில மணி நேரங்களில் பேசி முடிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் தமிழகம், கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பிரச்சினைக்கு இன்னும் முழுமையாக தீர்வு காண முடியவில்லை.
தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு தமிழகத்தில் இருந்து எதற்கு மின்சாரம் அளிக்க வேண்டும். எனவே வருகிற 15 ஆம் தேதி கருநாடகத்துக்கு மின்சாரம் அளிப்பதை கண்டித்து நெய்வேலியில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் அவர்.