காவிரி விவகாரம்: கர்நாடகா மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது தமிழக அரசு

பிரதமர் பிறப்பித்த உத்தரவு, உச்சநீதிமன்ற உத்தரவு ஆகியவற்றை மீறும் வகையில் காவிரியில் திறந்து விடப்பட்ட நீரை நிறுத்தி விட்டது கர்நாடகம். கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தின் முடிவில் கூட்டாட்சி தத்துவத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கர்நாடக செயல்படுவதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிப்பதாகவும் தமிழகத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் கர்நாடகா அரசு மீது உடனே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முதல்வர் உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.
இதில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக அரசு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் உள்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காவிரிப் பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் கர்நாடகம் செயல்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோதும் இப்படி நடந்து கொண்டு அதற்காக உச்ச நீதிமன்றத்தின் மிகக் கடுமையான கண்டனத்துக்குள்ளானவர் என்பது நினைவிருக்கலாம்.
10 நாட்களுக்கு பின் நீலகிரி-கர்நாடக வாகனப் போக்குவரத்து துவக்கம்:
இந் நிலையில் காவிரிப் பிரச்சனை காரணமாக தமிழகத்தின் நீலகிரி-கர்நாடக எல்லைப் பகுதியில் கடந்த 10 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாலைப் போக்குவரத்து இன்று மீண்டும் துவங்கியது.
ஒசூர், பண்ணாரி மார்க்கத்திலான போக்குவரத்து சில நாட்கள் நிற்பதும், சில மணி நேரம் பாதிக்கப்படுவதுமாக இருந்தது. ஆனால், நீலகிரி-முதுமலை-மைசூர் இடையிலான போக்குவரத்து கடந்த 10 நாட்களாக முழுவதுமாகவே முடங்கியிருந்தது.
இந் நிலையில், இன்று காலை நீலகிரிக்கு போக்குவரத்து துவங்கியது. கர்நாடகத்தில் இருந்து வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், தமிழகத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் கக்கநல்லா எல்லைப் பகுதியைக் கடந்து சென்றன.












Click it and Unblock the Notifications