திருப்பூரில் கன மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
திருப்பூர் : திருப்பூரில் செவ்வாய் கிழமை மாலை பெய்த கனமழையால் வெள்ளநீர் தாழ்வான பகுதிகளில் இருந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
திருப்பூரில் கடந்த ஒரு வாரகாலமாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் செவ்வாய்கிழமை மாலை 4 மணியில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்தன. சில நிமிடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழை இரவு 8 மணிவரை நீடித்தது.
நான்கு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சங்கிலிப்பள்ளம், ஜம்மனைப் பள்ளம் ஆகியவற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. நொய்யல் ஆற்றில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து பெருக்கெடுத்த காரணத்தினால் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் துர்நாற்றம் வீசியதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
கரட்டாங்காடு, பெரிச்சிபாளையம் பகுதிகளில் பாதாளசாக்கடைக்குழிக்குள் நிரம்பிய மழைநீர் கழிவுநீருடன் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது அரைமணிநேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் நேற்று பெய்த கனமழையால் அனல் நீங்கி குளிர்காற்று வீசியதால் திருப்பூர்வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications