சீர்காழி: டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் பலி!
சீர்காழி: சீர்காழி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த உடையான்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. விவசாயி. இவரது மகன் சுதீஷ்வரன்(12). இவர் பக்கத்து கிராமமான கொண்டலில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக சுதீஷ்வரன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்கு டாக்டர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல், அதே பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.
மேலும் காய்ச்சலுடன் சுதீஷ்வரன் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் மாணவன் சுதீஷ்வரனுக்கு காய்ச்சல் மேலும் அதிகரித்ததால் ஆசிரியர்கள், அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வீட்டுக்கு வந்த சுதீஷ்வரன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதையடுத்து சுதீஷ்வரன், சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
ஏற்கனவே நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவர் இறந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications