பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்து தலைமறைவான 'அப்ரோ யேசுதாஸ்' பிடிபட்டார்!
ரிசர்வ் வங்கியின் பெயரை விதிமுறைகளுக்குப் புறம்பாக பயன்படுத்தி விளம்பரம் செய்து, நிதி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டு, அதில் அப்ரோ நிறுவன மோசடியை அம்பலப்படுத்தியது.
இதனால் சென்னை மாநகர காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனிடையே குறைந்த வட்டியில் மகளிர் சுயவுதவிக் குழுக்களுக்கு கடன் தருவதாகக் கூறி பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அப்ரோ நிறுவன நிர்வாகிகள் சிலர் மட்டுமே சிக்கினர். அப்ரோ நிறுவனர் யேசுதாஸ் தப்பி ஓடி தலைமறைவானார்.
அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் அவர் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு சென்ற சென்னை போலீசார் அப்ரோ யேசுதாஸை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.