சென்னையில் பத்திரிக்கை அலுவலக பெண் ஊழியர் கொடூரக் கொலை
சென்னை: சென்னையில் பத்திரிக்கை அலுவலகத்தில்வேலை பார்த்து வந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரம் இதற்குப் பின்னணியில் இருக்கலாமோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கொண்டநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ஜோதிலட்சுமி, வயது 30. அதே மாவட்டத்தின் பொம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர், ஜோதிலட்சுமியின் கணவர். நல்ல அழகுடையவர் ஜோதிலட்சுமி. பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார்.
சென்னையில், தி.நகரில் உள்ள ஒரு தமிழ், ஆங்கில உள்ளூர் வாரப் பத்திரிக்கையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை பார்த்து வந்தார். முத்துப்பாண்டி தி.நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இருவரும் பஜனை கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த வாரப் பத்திரிக்கையை கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் நடத்தி வந்தார். ஜோதிலட்சுமி-முத்துப்பாண்டி தம்பதிக்கு ரோஷினி என்ற பெண் குழந்தை உள்ளது.
தினசரி மாலை 3 மணிக்கு தனது வீட்டுக்குச் சாப்பிடச் செல்வார் ஜோதிலட்சுமி. நேற்றும் வழக்கம் போல அவர் போய் விட்டுத் திரும்பி வந்து மீண்டும் வேலை பார்க்கத் தொடங்கினார். இந்த நிலையில் மாலை 5 மணிக்கு ஸ்ரீகுமார் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஜோதிலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மல்லாந்து விழுந்த நிலையில் ஜோதிலட்சுமி காணப்பட்டார். அவரது கழுத்தை அறுத்திருந்தனர். அவர் கழுத்தில் இருந்த நகைகளையும் காணவில்லை.
இந்தக் கொலையில் ஸ்ரீகுமார் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது. கள்ளக்காதல் காரணமாக இந்தக்கொலைநடந்திருக்கலாமோ என்று சந்தேகப்படுகிறார்கள்.
கொலை குறித்து தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறுகையில்,
கொலையாளி ஒருவன்தான் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். கொலைக்கான காரணம் குறித்து இரண்டு கோணங்களில் விசாரிக்கிறோம். பத்திரிகை உரிமையாளர் ஸ்ரீகுமார், வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். அதில் அவருக்கும், சிலருக்கும் தகராறு இருந்தது. அவரிடம் பகை கொண்டவர்கள் ஜோதிலட்சுமியை தீர்த்துக் கட்டினார்களா? என்று ஒரு கோணத்தில் விசாரிக்கிறோம்.
ஜோதிலட்சுமி பார்க்க அழகாக இருப்பார். அவருக்கு தவறான தொடர்பு இருந்ததாக புகார் எழுந்து, மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த கோணத்திலும் விசாரிக்கிறோம். இதுபற்றி அவரது கணவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. கொலையாளி வழக்கை திசை திருப்புவதற்காக ஜோதிலட்சுமி அணிந்திருந்த தாலி செயினை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று கருதுகிறோம். கொலையாளியைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.
கொலை நடந்த இடம் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பாகும். அதிகம் பேர் வசிக்கக் கூடிய ஒரு இடத்தில் கொலை நடந்திருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.