பிள்ளைகளை வீ்ட்டில் போட்டு பூட்டி விட்டு தண்ணி அடிக்கப் போன அம்மா, அப்பா!
லண்டன்: முறையே 4 வயது, 3 வயது மற்றும் 8 மாதக் கைக்குழந்தை ஆகியோரை வீட்டில் போட்டுப் பூட்டி விட்டு மது அருந்த பப்புக்குப் போய் விடிய விடிய குடித்து விட்டு காலையில் ஆற அமர வந்த பெற்றோரை போலீஸார் பிடித்து கோர்ட்டில் நிறுத்தினர். அவர்களுக்கு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.
இங்கிலாந்தின் லங்காஷயர், நெல்சன் நகரைச் சேர்ந்த அந்த பெற்றோரின் செயல் இங்கிலாந்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெற்றோரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் அந்தப் பெற்றோர் காரில் பப்புக்குக் கிளம்பினர். போகும்போது மறக்காமல் தங்களது மூன்று குழந்தைகளையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டு கிளம்பினர். பின்னர் பப்புக்குப் போய் விடிய விடிய மது அருந்தினர். கிட்டத்தட்ட 9 மணி நேர மது விருந்துக்குப் பின்னர் அதிகாலை 4 மணிக்கு வீடு திரும்பினர்.
வீட்டுக்கு வந்தபோது வெளியில் போலீஸார் குவிந்திருந்தனர். ஏறிய போதை பட்டென்று இறங்க, படபடப்புடன் வீட்டுக்குள் ஓடினர் இருவரும். அங்கு பெட்ரூமில் மூன்று குழந்தைகளையும் போலீஸ் அதிகாரிகள் அமர வைத்து ஆறுதலாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டனர்.
குடிபோதையில் வந்த பெற்றோரை போலீஸார் கடுமையாக கடிந்தனர். குழந்தைகளைப் பராமரிப்பதில் அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டி அவர்களைக் கோர்ட்டில் நிறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட் நவம்பர் மாதம் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டு பெற்றோர் தண்ணி அடிக்கப் போன தகவலை போலீஸாருக்குத் தெரிவித்து வரவழைத்தனர். தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். பூட்டிய கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது 4 மற்றும் 3 வயது குழந்தைகள் இருவரும் கதவுக்குப் பின்னால் பயந்து போய் ஒளிந்து நின்றிருந்தனர். கைக்குழந்தை பெட்ரூ்மில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சி போலீஸாரையே கலங்கடித்து விட்டதாம்.
போலீஸ் விசாரணையின்போது அந்தத் தாயார் இப்படிக் கூறினாராம்... குடிக்கப் போன பிறகு எனக்கு கொஞ்சம் கூட என்னோட குழந்தைகள் ஞாபகமே வரவில்லை ... 7 மணிக்கெல்லாம் பசங்க தூங்கிருவாங்க, சரி மது அருந்தி விட்டு வரலாம் என்றுதான் போனோம். ஆனால் ரவுண்டு ஆக ஆக எங்களுக்கு பிள்ளைகள் ஞாபகமே வரவில்லை என்றாராம்.












Click it and Unblock the Notifications