வத்ராவின் நில விவகார முறைகேடுகளை விசாரித்த ஹரியானா ஐ.ஏ.எஸ். அதிகாரி டிரான்ஸ்பர்

சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வத்ரா, டி.எல்.எப். கட்டுமான நிறுவனம் மற்றும் ஹரியான அரசுக்கு இடையேயான தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் முதலாவது மற்றும் தற்போதைய ஆட்சிக் காலத்தில் சோனியா காந்தியும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகளைப் பயன்படுத்தி ஏழைகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கியிருக்கின்றனர். இதனால் ஏழைகள் செய்வதறியாது வாழ்வாதாரத்துக்காகப் போராடி வருகின்றனர் என்று நிதிசென் ட்ரல் இணையதளத்தில் வெளியான கட்டுரையை தமிழ். ஒன்இண்டியா.இன். தளமும் வெளியிட்டிருந்தது.
மேலும் டி.எல்.எப். கட்டுமான நிறுவனத்துக்கான ராபர்ட் வத்ரா வாங்கிக் கொடுத்த நில விவகாரம் தொடர்பாக விசாரணைகளையும் ஹரியானா மாநில மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிஅசோக் கேம்கா கேள்வி எழுப்பியிருந்ததையும் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அதாவது, "இப்போது அரசியல்வாதிகள்- அதிகாரிகளின் முறைகேட்டினால் ஏழை விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுவதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக் கேம்கா, ஹரியானாவின் நில ஆர்ஜிதக் கொள்கையை கேள்விக்குள்ளாக்குகிறார். இவர்தான் ஹரியானா மாநில நில ஆர்ஜிதத்துக்கான சிறப்பு ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறவர். நெடுஞ்சாலையை ஒட்டி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சாயத்து விளைநிலங்கள் அடிமாட்டு விலைக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது என்கிறார்." என்று அந்தக் கட்டுரையில் நாம் பதிவு செய்திருந்தோம்.
இந்த நிலையில் ராபர்ட் வத்ரா - டி.எல்.எப். நிறுவனம் தொடர்பான ரூ58 கோடி நில ஆர்ஜித முறைகேடு விசாரணை நடத்தவும் அசோக் கேம்கா தொடங்கினார். இந்த விசாரணையைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஆத்திரமடைந்த ஹரியானா மாநில காங்கிரஸ் அரசு அதிரடியக கேம்காவை இடமாற்றம் செய்திருக்கிறது.
அசோக் கேம்கா கருத்து
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அசோக் கேம்கா, மக்களுக்கான பணியாளர்கள் நாங்கள். நாங்கள் எங்கள் கடமையை செய்யும் போது யார் யாருக்காகவோ நாங்கள் பலிகடாவாக்கப்படக் கூடாது. 21 ஆண்டுகால பணிகாலத்தில் இது மகிழ்ச்சியான தருணமாக அனுபவமாக இல்லை என்று தெரிவித்துள்ளார்
இந்த விவகாரமும் பெரும் சர்ச்சைக்குரியதாக உருவெடுத்திருக்கிறது! பாரதிய ஜனதா கட்சியும் சமூக ஆர்வலர் கெஜ்ரிவாலும் இந்த விவகாரத்தையும் கையிலெடுத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications