நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவான பேச்சு: 2 இந்து முன்னணியினர் கைது
சென்னை: பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்களையும், நபிகள் நாயகத்தையும் தரக்குறைவாக பேசியதாக வந்த புகாரை அடுத்து இந்து முன்னணி பிரமுகர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த பொதுக்கூட்டத்தில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமிய மக்களையும் தரக்குறைவாக பேசியதாக, புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அந்த இந்து முன்னணி பிரமுகர்களை கைது செய்யக்கோரி திங்கட்கிழமை காலை முதல் இரவு வரை புளியந்தோப்பு காவல் நிலையம் முன்பு அனைத்து இஸ்லாமிய மக்களின் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் தரக்குறைவாக பேசிய 2 இந்து முன்னணி பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் புளியந்தோப்பு காவல் நிலையத்தின் முன்பு அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பதற்றம் உருவானது கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர்கள் முருகேசன், சுந்தர்ராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் போராட்டம் நடத்தியவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முற்றுகை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications