முளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு வாழ்வளித்தார்
சென்னை: சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட தனியார் செல்போன் நிறுவன அதிகாரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகில் உள்ள ஆட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏ.மாரிமுத்து (வயது 28). இவர் சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. மாரிமுத்துவுக்கு ஜி.சகுந்தலா (23) என்ற மனைவியும், 2 மாத பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், மாரிமுத்து கடந்த 14-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் கூட்டுரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையிலுள்ள வேகத்தடையில் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை பொதுமக்கள் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மாரிமுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை மாரிமுத்து மூளைச்சாவு அடைந்தார். இதை கேட்டு அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறியழுதனர்.
பின்னர் மாரிமுத்துவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதைத் தொடர்ந்து மாரிமுத்துவின் கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இருதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் எடுத்தனர். மாரிமுத்துவின் உடல் உறுப்புகள் பல பேருக்கு பொருத்தப்பட உள்ளன. இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, மாரிமுத்து இறந்தும் பல பேருக்கு வாழ்வு கொடுத்துள்ளார்' என்று பெருமிதத்துடன் தெரிவித்தனர்.