''டிரான்ஸ்பார்மரை ஆப் செய்துவிட்டு எனது உடலை எடுக்கவும்''.. தற்கொலை செய்த எலக்ட்ரீசியன்
நாமக்கல்: டிரான்ஸ்பார்மரை ஆப் செய்துவிட்டு எனது உடலை எடுக்கவும் என்று எச்சரிக்கை கடிதம் எழுதி வைத்த புத்திசாலி எலக்ட்ரீசியன், தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பஷீர் அகமது(64). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நாமக்கலுக்கு குடிபெயர்ந்த பஷீர், நேரு நகரில் சிறிய எலக்ட்ரிக்கல் கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் பஷீர் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் கொக்கி போடப்பட்டு இருந்தது.
இதில் சந்தேகமடைந்த அப்பகுதியினர், அவரது வீ்ட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவரது வீட்டு கதவில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டிருந்தது. அதில், என் மீது இருமுனை மின்சாரம் 440 வாட் பாய்ந்து கொண்டிருக்கிறது. எனவே என்னை தொட வேண்டாம். டிரான்ஸ்பார்மரை 'ஆப்' செய்துவிட்டு வந்து தொடவும். இது என் சொந்த முடிவு தான் என்று எழுதப்பட்டு இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மின் கம்பத்தில் இருந்த கொக்கியை அகற்றிவிட்டு, வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது பஷீர் அகமது, தனது கை மற்றும் உடலில் மின்சார வயரை சுற்றிக் கொண்டு உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பிறகு பஷீர்அகமது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பஷீர்அகமது எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவரது உடலை புதைக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அவர் எழுதி இருந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது,
அன்புள்ள தம்பி ரஷீதுக்கு, நான் எடுத்துள்ள இந்த முடிவு ஒரு ஆண்டிற்கு முன்பே எடுத்தது. எனக்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என் பிள்ளைகளாலும் (அக்தரை தவிர) எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. எனது இறப்புக்கு உண்டான செலவை (இறுதி சடங்கு) செய்வதற்கு கூட அவர்களுக்கு நேரமும், வசதியும் இல்லை.
ஆகவே நீ நமது தம்பிகளுடன் ஆலோசித்து, எனது இறுதி சடங்கை எளிமையான முறையில் நடத்தி முடிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டு கொள்கிறேன். குறிப்பு: கபரஸ்தானில் (சுடுகாடு) கேட்டுக்கு நேராக சென்றால், இடக்கை கடைசியில் புதைக்கவும், வேறு எந்த பக்கமும் போக வேண்டாம், நான் ஏற்கனவே இடத்தை பார்த்து விட்டு வந்து உள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எச்சரிக்கை கடிதம் எழுதிவைத்து விட்டு, உடலில் மின்சாரம் பாய்ச்சி எலக்ட்ரீசியன் தற்கொலை செய்த சம்பவம் நாமக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.