கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான 63 பேருக்கு ஜாமீன்: உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லை: கூடங்குளத்தில் அணுஉலை திட்டத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடியது தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்ட 63 பேருக்கு ஜாமீன் வழங்கி, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் கூடங்குளம் அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளதால், அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு இன்று கூடங்குளம் அணுஉலை திட்டத்தின் ஆய்வு பணியை துவங்கியது.
கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக, போராட்ட குழுவினர் பல வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தொடர் போராட்டங்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மின்உற்பத்தியை துவங்க இருந்த கூடங்குளம் அணுஉலை இன்னும் மின்உற்பத்தியை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்டவர்கள், மதுரை உச்சநீதிமன்ற கிளையில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி மதிவாணன் முன்னிலை விசாரணைக்கு வந்தது. அப்போது 10 வழக்குகளில் தொடர்புடைய 63 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். சிலர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நிராகரிக்கப்பட்டன.
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்தியா-ரஷ்யா கூட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலை இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் தன்மை கொண்டது என்று மத்திய அரசு தரப்பில் கடந்த 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு குறித்து பிரச்சனையை கிளப்பும், எதிர்ப்பு குழுவினரின் போராட்டம் அடிப்படை அற்றது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
அணுஉலையில் ஆய்வு துவக்கம்:
இந் நிலையில் கூடங்குளம் அணுஉலை யுரோனியம் எரிபொருள் நிரப்பும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு, இன்று அணுஉலை ஆய்வை இன்று துவங்கியது.
இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பின் சேர்ந்த உறுப்பினர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்ட இந்த குழு இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications