14 பேரை பலி கொண்டது கனமழை- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: தமிழ்நாட்டில் அடித்து வெளுத்து வரும் வடகிழக்கு பருவமழை மொத்தம் 14 பேரை பலி கொண்டிருக்கிறது. தொடர் மழையால் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தனது உக்கிரத்தை கொட்டி வருகிறது. நேற்று முன் தினம் மழையால் இடிதாக்கி 4 பெண்களும் மின்னல்தாக்கி 2 பெண்களும் உயிரிழந்திருந்தனர்.
சென்னை அயனாவரத்தில் ரமேஷ், தண்டையார்பேட்டையில் மணி ஆகியோர் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து தாக்கியதில் நேற்று உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் அலெக்ஸ், சிவகாசி அருகே பாரைப்பட்டியில் தங்கமுனீஸ்வரி, கண்ணன் மற்றும் ஏ. ராமலிங்கபுரத்தில் காளீஸ்வரன் ஆகியோர் நேற்று மின்னல் தாக்கி பலியாகினர்.
இதேபோல் திருத்துறைப்பூண்டியில் அய்யாக்கண்ணு மற்றும் அவரது மருமகன் மகாலிங்கம் ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
தமிழகத்தில் தொடர் கனமழை மற்றும் இடி மின்னலுக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
இந்நிலையில் தொடர் மழையால் விழுப்புரம், திருவாரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications