'காதுகுத்து' ரவி என்னை மிரட்டுகிறார்.. உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கு
சென்னை: காதுகுத்து ரவி என்ற ரவுடி தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரியும் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
எனது கணவர் ஷாகுல் அமீது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் இந்தியா வரும் போதெல்லாம் ரவுடி காதுகுத்து ரவி அவரை மிரட்டி பணம் பறித்து வந்தார். இதனால் எனது கணவர் இந்தியாவுக்கு வருவதையே நிறுத்தி விட்டார்.
இருந்தாலும் விடாமல், வெளிநாட்டில் உள்ள எனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு காதுகுத்து ரவி மிரட்டுகிறார். வீட்டில் தனியாக இருக்கும் என்னையும் மிரட்டுகிறார். ஏற்கனவே எனது கணவரின் முதல் மனைவி குடும்பத்தினரை காது குத்து ரவி மிரட்டியதால் அவர்கள் சென்னையை விட்டு கர்நாடகாவுக்கு குடியேறி விட்டார்கள்.
முதல் மனைவி மகன் சென்னை கல்லூரியில் படித்து வருகிறான். அவனையும் மிரட்டுகிறார்கள். இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்தேன். எனது புகார் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரித்தார். பின்னர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி மாநகர காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications