தமிழகத்தில் கனமழை நீடிப்பு: கல்லூரி-பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை ஏமாற்றிய நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாகவே, வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளது. கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால், நேற்று சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ததது. பலத்த மழை காரணமாக சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் இன்றும் பலத்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது,

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை, தமிழகம், ஆந்திரா ஆகியவற்றை ஒட்டிய வங்க கடலில் நீடிக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும். உள்மாவட்டங்களில் சில இடங்களில் கனத்த மழை பெய்யும். குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மன்னார் வளைகுடா பகுதியை இன்று கடந்து செல்லும். எனவே சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். இடியுடனும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.

காவிரி டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்கவும், நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேபோல காஞ்சிபுரத்தில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க பள்ளிக்கூடங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+