தப்பு மேல் தப்பு.. கண்டித்த மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற ஆசிரியர்!
தர்மபுரி: தர்மபுரியில், தனது கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, யாரோ வந்து கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்து விட்டதாக நாடகமாடி கைதாகியுள்ளார்.
தர்மபுரி ஏ.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவருக்கு 45 வயதாகிறது. முண்டாசுபறவடை அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இவருக்கு 40 வயதில் பூங்கொடி என்ற மனைவி இருந்தார். இவரும் தலைமை ஆசிரியைதான். கூன்மாரிக்கொட்டாய் அரசு தொடக்கப் பள்ளியில் இவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றினார்.
இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் பூங்கொடிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்காக மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார் பூங்கொடி. அவரது தாயார் உடன் இருந்து பார்த்து வந்தார்.
16ம் தேதி மாலை, பூங்கொடி வீட்டுக்கு அருகில் உள்ள தனது இன்னொரு மகளின் வீட்டுக்கு தாயார் போயிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது பூங்கொடி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது கழுத்தில் கிடந்த 15 பவுன் நகைகளையும் காணவில்லை.
இதையடுத்து சிவானந்தம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாணையில் இறங்கியபோது சிவானந்தம் மீ்து சந்தேகம் திரும்பியது. இதையடுத்து அவரை தீவிரமாக விசாரித்தபோது தான்தான் பூங்கொடியைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து போலீஸாரிடம் சிவானந்தம் கூறுகையில், எனக்கும், நான் வேலை பார்த்து வந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அதேபோல பூங்கொடியின் உறவுக்காரப் பெண் ஒருவருடனும் தொடர்பு ஏற்பட்டது.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பூங்கொடி என்னைக் கண்டித்தார். மேலும் உறவினர்களிடமும் இதுகுறித்து அவர் முறையிட்டார். இதனால் நான் அவமானமடைந்தேன்.
சம்பவத்தன்று நான் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. கோபமடைந்த நான் பூங்கொடியை அடித்தேன். பின்னர் கழுத்தில் துண்டைப் போட்டு நெரித்துக் கொலை செய்தேன். பிறகு பூங்கொடியின் கழுத்தில் இருந்த நகைகளை எடுத்து பீரோவில் மறைத்து வைத்தேன். பிறகு போலீஸில் புகார் கொடுத்தேன் என்றார்.
இதைத் தொடர்ந்து சிவானந்தத்தை போலீஸார் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications