பூசணிக்காய் உடைச்சா உடனே எடுத்திருங்க: இல்லைன்னா 'பைன்' கட்டணும்!
சென்னை: ஆயுதபூஜையை ஒட்டி சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி உடைப்பவர்கள் உடனே அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆயுத பூஜை பண்டிகை விழாவின் முக்கிய அம்சமாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் திருஷ்டி பூசணிக்காய் உடைப்பது வழக்கம். இதனால் ரோடுகளில் ஏராளமான பூசணிக்காய் சிதறிக்கிடக்கும். இது பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்டுத்தி வருகிறது. வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படும். எனவே மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியுள்ளதாவது :
ஆயுத பூஜை தினத்தன்று பூசணிக்காய் மற்றும் தேங்காயை உடைத்து சாலைகளில் அப்படியே போட்டு விடுகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளாகிறார்கள். பொதுமக்களும் நடப்பதற்கு சிரமப்படுகிறார்கள். எனவே ஆயுத பூஜை விழாவின்போது வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைக்காரர்கள் உடைக்கும் பூசணிக்காயை அவர்களே அப்புறப்படுத்தி குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். மீறி சாலைகளில் போட்டு வைத்தால் மாநகராட்சியின் மூலம் அபராதம் விதிக்கப்படும்.
பொதுமக்கள் நலன் கருதி பொதுமக்களும், கடைக்காரர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கமிஷனர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications