போலி ஆவணம் தயாரித்து நிலங்கள் விற்பனை: அதிமுக பிரமுகருக்கு வலைவீச்சு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் தயாரித்து 100 ஏக்கர் நிலத்தை விற்ற புரோக்கரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அதிமுக பிரமுகர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் பனிச் சித்ரஹெம்ப்ரான், ஜேகேஷ் ஹெம்ப்ரான். இவர்களுக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலம் ஒட்டப்பிடாரம் அருகே கே.தளவாய்புரத்தில் உள்ளது. இதை பாளையங்கோட்டையை சேர்ந்த ரிண்டு என்பவர் நிர்வகித்து வருகிறார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு நில புரோக்கரான வடக்கு பரம்பூரை சேர்ந்த ரங்கநாத கண்ணன் என்பவரும், ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த அதிமுக ஊராட்சி செயலாளர் கெம்புமகாராஜா உள்ளிட்ட சிலரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து இந்த நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதுபோல் டெல்லி கர்னல் ரோட்டை சேர்ந்த பிசம்பீர் தயாள் மகன் உபேத் தயாள் என்பவருக்கு சொந்தமான 50.36 ஏக்கர் நிலத்தையும், மேற்கு வங்கத்தை சேர்ந்த தகட்டால்ஹரி என்பவருக்கு சொந்தமான தாளவாயபுரத்தில் உள்ள 10.7 நிலத்தையும் இந்த கும்பல் மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த 3 நிலங்களும் சென்னையில் உள்ள சகாபுதீன் என்பவரது ஷிப்பிங் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து நிலத்தின் உரிமையாளர்கள் தூத்துக்குடி மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நில புரோக்கர் ரெங்கநாத கண்ணனை கைது செய்தனர். கொம்புமகாராஜா உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications