விஜயகாந்த்துக்கு 'ஷாக்'... ஜெ.வை நேரில் சந்தித்து 2 தேமுதிக எம்.எல்.ஏக்கள் திடீர் பாராட்டு!!!
சென்னை: மதுரை மத்திய தொகுதி சுந்தரராஜன் மற்றும் திட்டக்குடி தமிழழகன் ஆகிய இரு தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவை இன்று காலை திடீரென நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேமுதிக வட்டாரம் இந்த இரு எம்.எல்.ஏக்களின் செயலால் பெரும் அதிர்சசியில் மூழ்கியுள்ளது. கட்சி உடையுமா என்ற பெரும் பரபரப்பும் கூடியுள்ளது.

ஏற்கனவே தேமுதிகவை உடைக்க சில முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் பரவிக் கிடக்கின்றன. சமீபத்தில் கூட அக்கட்சியிலிருந்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணித் தலைவியை விஜயகாந்த் நீக்கினார். இவர் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்துப் பேசியதாகவும், கட்சியை உடைக்க முயற்சிப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இருப்பினும் பின்னர் இவர் திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டார்.
நேற்று தேமுதிகவின் சேலம் எம்.எல்.ஏ மோகன்ராஜ், வீரபாண்டி ஆறுமுகத்தைப் போய்ப் பார்த்துள்ளார். இது குறித்தும் சில வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில் தேமுதிகவின் இரண்டு எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவையே நேரில் போய்ப் பார்த்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே ஏழாம் பொருத்தம் என்பது உலகுக்கே தெரியும். மேலும் போகிற இடமெல்லாம் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வருகிறார் விஜயகாந்த். அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அரசை மாற்ற வேண்டும் என்றும் கூறி வருகிறார்.
இந்த நிலையில் அவரது கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை நேரில் பார்த்து ஆட்சி சிறப்பாக நடப்பதாக புகழாரம் சூட்டியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இருவரும் தத்தமது தொகுதி மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக நேரில் சந்தித்து முதல்வரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த சந்திப்பின்போது தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து தெரியவில்லை. விஜயகாந்த்துக்கு இவர்கள் ஜெயலலிதாவை சந்திக்கப் போவது குறித்துத் தெரியுமா.. அல்லது சொல்லாமல் போய்ப் பார்த்தார்களா.. அல்லது, இருவரும் கட்சியை விட்டு விலகப் போகிறார்களா என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை.
ஏற்கனவே கட்சித் தலைமையிடம் சுந்தரராஜன் அதிருப்தியில் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதேபோலத்தான் தமிழழகனும் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இவர்களின் ஜெயலலிதா சந்திப்பு பெரும் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.
தேமுதிகவின் மூ்ன்று எம்.எல்.ஏக்கள், திமுக, அதிமுக முகாம்களுக்குப் போய்த் திரும்பியிருப்பது குறித்து இதுவரை தேமுதிக தலைமையிடமிருந்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications