என் முகத்திலேயே முழிக்காதே.. விஜயகாந்த் போட்ட 'தடா'வால் தடம் மாறிய சுந்தரராஜன்!
சென்னை: மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சுந்தரராஜனுக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் போட்ட கடுமையான தடை காரணமாகவே அவர் அதிரடியாக முதல்வர் ஜெயலலிதாவைப் போய்ப் பார்த்து விட்டதாக கூறுகிறார்கள்.

விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர்
சுந்தரராஜன் ஆரம்ப காலத்திலிருந்தே விஜயகாந்த்துக்கு நெருக்கமான நண்பர் என்பதால் அவரது இந்த திடீர் தாவல் தேமுதிகவினரை மட்டுமல்லாமல், விஜயகாந்த் குடும்பத்தினரையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

நம்ம சுந்தரா இப்படி... விஜயகாந்த் குடும்பம் அதிர்ச்சி!
சுந்தரராஜன் இப்படிச் செய்வார் என்று தேமுதிகவினரும், விஜயகாந்த் குடும்பத்தினரும் எதிர்பார்க்கவில்லையாம். அவர் அப்செட்டாக இருப்பது விஜயகாந்த்துக்கு ஏற்கனவே தெரிந்தபோதிலும் அவரை சமாதானப்படுத்தி வைத்திருந்தாராம். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு விஜயகாந்த்தைக் கொந்தளிக்க வைத்து விட்டதாம்.

பன்னீரைப் பார்த்ததால் கொந்தளித்த விஜயகாந்த்
சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சுந்தரராஜன் வீடு தேடிப் போய்ப் பார்த்து நீண்ட நேரம் பேசினாராம்.இது விஜயகாந்த் காதுக்குப் போகவே கடும் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். உடனே சுந்தரராஜனை போனில் பிடித்த அவர், என் முகத்திலேயே முழிக்காதே, என் வீட்டுப் பக்கம் வராதே, கட்சி நிகழ்ச்சிகளுக்கும் வராதே என்று கூறி விட்டு போனை வைத்து விட்டாராம்.

திட்டக்குடி தமிழழகனும் அப்செட்டில்..
இதனால் சுந்தரராஜன் கடும் அதிருப்தி அடைந்தார். இதேபோலத்தான் திட்டக்குடி தமிழகனும் அதிருப்தியில் இருந்து வந்தார். கூட்டிக் கழித்துப் பார்த்த சுந்தரராஜன், எங்கிருந்தோ வந்த அட்வைஸின்படி முதல்வர் ஜெயலலிதாவை இன்று நேரில் போய்ப் பார்த்துப் பேசி விட்டு வந்து விட்டார்.

விரைவில் தேமுதிகவுக்கு முழுக்கு?
விரைவில் சுந்தரராஜனும், தமிழழகனும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளையும், கட்சிப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அடுத்தடுத்து அதிர்ச்சி
அடுத்து மேலும் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை தேமுதிக பார்க்கும் என்றும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications