பள்ளிப் பிள்ளைகளைப் பாதுகாக்க 'அம்மாக்கள்' குழு அமைப்பு!
சென்னை: பள்ளி வேன் மோதி விபத்து, நீச்சல் குளத்தில் மாணவன் மூழ்கி பலி உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தடுக்கும் மற்றும் தவிர்க்கும் பொருட்டு அனைத்துப் பள்ளிகளிலும் தாய்மார்களைக் கொண்ட அம்மாக்கள் குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேலையூர் ஜியோன் பள்ளியில் பேருந்தில் பயணம் செய்து, அதில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து பேருந்து நசுக்கி ஸ்ருதி என்ற சிறுமி உயிரிழந்தாள். அதேபோல சென்னையில் உள்ள நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தாருக்குச் சொந்தமான பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
பள்ளி வேன், பஸ் மோதி இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில்தான் இப்படி ஒரு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது...
- மழலையர் வகுப்பு, 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை, 4 முதல் 5 வரை, 6 முதல் 10 வரை, 12 முதல் 12 வரை என்று 5 பேர் இடம் பெறவேண்டும். குழுவில் இடம்பெற்றுள்ளவர்களை வாரா வாரம் மாற்ற வேண்டும்.
- ஆய்வு குழுவில் இடம்பெறுவோரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்யும் அம்மாக்கள் குழுவின் குறிப்புகளை பதிவு செய்ய பார்வை பதிவேடு பராமரிக்க வேண்டும். அதில், குழுவினர் கண்டறியும் குறை உள்ளிட்ட விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
- குறைகளை சரிசெய்ய தொடர் நடவடிக்கைகளை தாளாளர், செயலாளர், முதல்வர் எடுக்கவேண்டும். அதுகுறித்தும் பதிவு செய்ய வேண்டும்.
பள்ளிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
இதேபோல பள்ளி மாணவி, மாணவியர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
- பள்ளி வளாகத்தை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
- உடைந்த கட்டிட இடிபாடுகள், கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். மின்சார வயர்கள் முழு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- மாணவர்களின் எண்ணிக்கை 1500க்கு மேல் இருந்தால் முழு நேர மருத்துவ குழு இருக்க வேண்டும். குறைவான எண்ணிக்கை என்றால் முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும்.
- 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம், 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பிடம் என்று இருக்க வேண்டும். வகுப்பறைகளில் காற்றோட்டம், வெளிச்சம் போன்ற வசதிகள் வேண்டும்.
- பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டுகளை தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் மேற்கொள்ள வேண்டும்.
- வகுப்பில் வருகை புரிந்த மாணவர்கள் அனைவரும் பள்ளியை விட்டு சென்று விட்டனர் என்பதை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பிறகே பள்ளியை விட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications