விஜயகாந்த் மீது எப்.ஐ.ஆர். பதிவு-கொட்டும் மழையில் பொங்கி எழுந்த தேமுதிகவினர்!
திருச்சி: தேமுதிக தலைவர் விஜய்காந்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, போலீஸ் அனுமதியின்றி தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, தேமுதிகவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியது தொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கும், நிருபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தனியார் டிவி சேனல் நிருபர் பாலுவை, எம்.எல்.ஏ. ஒருவர் கீழே தள்ளிவிட்டார். இது குறித்து பாலு, விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் போலீசார், அவரது புகாருக்கான சான்றிதழ் மட்டும் அளித்துவிட்டு, வழக்கு பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரஸ் மீடியா அசோஷியேசன் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இதில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நிருபர் பாலுவை தாக்கிய எம்.எல்.ஏ. ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விஜயகாந்த் முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவின் மீதான விசாரணையை நீதிபதி இன்றைக்கு தள்ளி வைத்தார்.
இதனால் தேமுதிக தொண்டர்கள் இடையே அதிருப்தி நிலவியது. இந்த நிலையில் நேற்று இரவு தேமுதிகவினர் இடையே ஒரு ரகசிய அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இதில் தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் முற்றுகை போராட்டம் நடத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்று இன்று காலையில் கொட்டு மழையும் பொருட்படுத்த தேமுதிகவினர், போலீஸ் அனுமதியின்றி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். திருச்சி கலெக்டர் அலுவலம் முன்பாக கொட்டும் மழையில் தேமுதிகவினர் போராட்டம் நடத்த கூடி உள்ளனர்.












Click it and Unblock the Notifications