சொத்து குவிப்பு வழக்கு ஆவணங்களை பார்வையிட சசிகலாவிற்கு 21 நாட்கள் அவகாசம்
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 21 நாட்கள் கால அவகாசம் வழங்கி பெங்களூர் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜரான ஜெயலலிதா வாக்குமூலம் அளித்துள்ளார்.
அடுத்தப்படியாக வழக்கில் சசிகலாவிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கு குறித்த ஆவணங்களை பார்வையிட அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட அனுமதி வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 18ம் தேதி 21 நாட்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதன் நகலை சசிகலாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி சோமராஜூ முன்னிலை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு ஆவணங்களை பார்வையிட 21 வேலை நாட்கள் அவகாசம் வழங்குமாறு சசிகலாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சோமராஜு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி குற்றச்சாட்டப்பட்டவர்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்வையிட 21 வேலை நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications