சென்னைக்கு 'அந்தாண்டை' 180 கி.மீ நகர்ந்து போய் விட்டது நிலம்!

பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்ட நிலம் புயல் நேற்று பெரியஅளவில் சேதாரத்தை ஏற்படுத்தாமல் பத்திரமாக மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்து விட்டது. நேற்று மாலை அது நாலரை மணிவாக்கில் கரையைக் கடந்தபோது பலத்த சூறாவளிக் காற்று சுழற்றியடித்தது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்றால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். கடலிலும் கடும் சீற்றம் காணப்பட்டது. கடலில் அலைகள் 10 அடி உயரத்திற்கு எழுந்து வந்தன. இதனால் கடற் பகுதியில் பலத்த முன்னெச்சரிக்கையாக மக்களை போலீஸார் அனுமதிக்கவில்லை.
மகாபலிபுரம் பகுதியில் புயல் கரையைக் கடந்த போது மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சில மணி நேரங்கள் இந்த மழை நீடித்தது. நேற்று மட்டும் அப்பகுதியில் 220 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.
புயல் பின்னர் கரையைக் கடந்து வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றது.
தற்போது நிலம் புயல், சென்னைக்கு வடமேற்கே 180 கி.மீ தொலைவில் கர்நாடகம் மற்றும் ஆந்திர எல்லையில் நிலை கொண்டுள்ளதால், தமிழகத்திற்கு ஆபத்து முற்றிலுமாக நீங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் தற்போது மழை அவ்வளவாக இல்லை. சில இடங்களில் தூறல் காணப்பட்டது. மற்றபடி வானம் மேகமூட்டமாக மட்டுமே உள்ளது.
நேற்று கடலூரில் அதிகபட்சமாக 70 மில்லிமீட்டர் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications