நாய்களைக் காப்பாற்றுங்கள்... வெள்ளத்தில் சிக்கிய பெண்ணின் போராட்டம்
வேலூர்: வேலூர் அருகே ஆற்று வெள்ளம் சூழ்ந்த போதும் தான் வளர்த்த மூன்று நாய்களை காப்பாற்ற பெண் போராடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா முக்கோட்டி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். ஓய்வுபெற்ற போலீஸ்காரரான இவர் தனது மனைவி லதா உடன் அங்குள்ள ஆற்றங்கரையோரம் வீடுகட்டி வசித்து வருகிறார். இவர்களின் வீடு தனியாக இருப்பதால் காவலுக்காக வீட்டில் 3 நாய்கள் வளர்த்து வருகின்றனர். பெற்ற பிள்ளைகளைப் போல அந்த நாய்கள் மீது லதா பாசம் வைத்திருப்பாராம்.
கடந்த இருதினங்களுக்கு முன் புயல் காரணமாக மழை பெய்து அகரம் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பால் கோவிந்தராஜின் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் சூழ்வதைக் கண்ட கோவிந்தராஜ் அங்கிருந்து தப்பினார். ஆனால் அவரது மனைவி லதா மற்றும் நாய்களால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை.
இதனையடுத்து வெள்ளம் சூழ்ந்த வீட்டில் சிக்கிய பெண்ணை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டிற்குள் பாம்பு ஒன்று இருந்ததால் லதாவை மட்டும் மீட்க முடிவு செய்தனர் தீயணைப்பு வீரர்கள். ஆனால் தனது மூன்று நாய்களையும் தன்னுடன் மீட்டால் மட்டுமே தானும் வருவேன் என்று லதா கூறிவிட்டார். இதையடுத்து மேலும் சில வீரர்கள் அந்த வீடு இருக்கும் பகுதிக்குச் சென்றனர். அவர்கள் முதலில் வீட்டிலிருந்த விஷ பாம்பை அடித்துக்கொன்றுவிட்டு லதாவையும், அவரது மூன்று நாய்களையும் மீட்டனர்.
தங்களுக்கு காவலாக இருந்த செல்லப்பிராணிகளுக்காக உயிரை பணயம் வைத்து போராடிய பெண்ணின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications