முல்லைப் பெரியாறு அணை வழக்கு.. பிப். 19ம் தேதி இறுதி விசாரணை

முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை சரியில்லை, அணை பலவீனமாக உள்ளது, உடைந்தால் பேராபத்து என்று கேரள அரசு பிரச்சினை கிளப்பியது. இதையடுத்து அதை மறுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்தக் குழு முல்லைப் பெரியாறு அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. ஆய்வறிக்கையும் பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அணை நல்ல பலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இறுதிக் கட்ட விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி நடைபெரும் என்றும், ஜனவரி 28ம் தேதி இடைக்கால உத்தரவகுள் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் ஆனந்த் குழுவின் அறிக்கை நகல்களை கேரள அரசு, தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை இரு மாநில அரசுகளும் பரிசீலனை செய்து, அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது குறித்து ஜனவரி 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகி விளக்கம் கோரலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் நலப் பணியாளர் நீக்க விவகாரம்
இதற்கிடையே, மக்கள் நலப்பணியாளர் நீக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் தொடர்ந்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்றும், இந்த வழக்கு குறித்து 4 வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications