போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற உதவும் கும்பல் கைது-தலைமறைவாக செயல்படும் கும்பல்களுக்கு வலை!
திருச்சி: போலி ஆவணங்களை பயன்படுத்தி நீதிமன்றங்களில் ஜாமீன் பெற உதவும் திருச்சியை சேர்ந்த ஒரு கும்பலை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பெயரில் தலைமறைவாக செயல்பட்டு வரும் மோசடி கும்பல்களை கைது செய்த திருச்சி போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
திருச்சி நடுவண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் ஈஸ்வரி(33). திருட்டு வழக்கில் கைதான இவர், ஜாமீனில் விடுதலையானார். ஆனால் இவர் ஜாமீன் கிடைப்பதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து சமர்ப்பித்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து ஈஸ்வரியின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில், குற்றவாளிகளை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக போலியான நில உறுதி பத்திரம் (பட்டா), வருமானம் மற்றும் இருப்பிட சான்றுகள், அவற்றை தயாரிக்க பயன்படுத்திய 65 போலி அரசு முத்திரைகள், போலி குடும்ப அட்டைகள், போலி வீட்டு வரிச் சீட்டுகள் உள்ளிட்ட 3,200க்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள் சிக்கியது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரிகள், ஈஸ்வரியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் புத்தூர் நடுவண்ணாரைப்பேட்டையை சேர்ந்த குறைசாபேகம்(55) என்பவருக்கும், இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குறைசாபேகம், அவரது மகன் முகமதுகனி(32), தங்கை மகன் சாகுல் அமீது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். குறைசாபேகத்திடம் நடத்திய விசாரணையில், தங்களை போல திருச்சியில் 5 மோசடி கும்பல் செயல்பட்டு வருவதாகவும், திருச்சி மட்டுமின்றி பிற நகரங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெற அவர்கள் தயாரித்த ஆவணங்களை அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தமிழகம் முழுக்க பரவியுள்ள இந்த மோசடி கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications