தேவர் ஜெயந்தி படுகொலைகள்: 7ம் தேதி மாநில அளவில் 'பந்த்' அறிவிப்பு
மதுரை: தேவர் ஜெயந்தியின் போது 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி விசாரணை கோரி வரும் 7ம் தேதி தமிழகம் முழுக்க கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தேவர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
இது குறித்து மதுரையில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் எம்எல்ஏ, அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் கூட்டாக கூறியதாவது,
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் இந்தாண்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது பிடிக்காத சிலர் சதித் திட்டம் தீட்டி கலவரத்தை தூண்டி தேவரின தொண்டர்களான 3 பேர் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்துள்ளனர். சிலர் பலத்த தீக்காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சதிக்கு பின்னால் உள்ளவர்கள் குறித்து கண்டறிய தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கொலையாளிகளை கண்டறிந்து, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்தும் வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பும் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். மேலும் வரும் டிசம்பர் 9ம் தேதி மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.
இந்த கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அனைத்து இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் கட்சி, பாரதீய பார்வர்டு பிளாக் கட்சி, அகில இந்திய தேவர் பேரவை, அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை, வீரவிடுதலை முக்குலத்தோர் மக்கள் இயக்கம், நாடாளும் மக்கள் கட்சி உள்ளிட்ட 15 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்றனர்.












Click it and Unblock the Notifications