நவம்பர் முழுக்க மாவீரர் மாதமா? - கனடிய தமிழ்ப் பேரவை அறிக்கை!
டொரோண்டோ(கனடா): நவம்பர் மாதத்தை மாவீரர் மாதம் என கடைப்பிடிப்பது அவரவர் விருப்பமே என கனடா தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது.
கனடாவில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய அமைப்பான கனடியத் தமிழர் பேரவை, இதுவரையிலும் மாவீரர் மாதம் என்று ஒன்று கடைப்பிடிக்கவில்லை. இருபது வருடமாக இல்லாத ஒன்றை புதிதாக சிலர் ஆரம்பித்துள்ளனர். இப்படி ஒரு மாதத்தை கடைப்பிடிப்பது அவரவர் சொந்த விருப்பத்தற்குரியது. யார் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான அப்பேரவையின் அறிக்கை:
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. அதையொட்டிய வாரம் முழுவதும் உணர்வு பூர்வமான நிகழ்வுகளால் உலகெங்கும் அனுசரிக்கப் பட்டுவருகிறது. இந்த வருடம் நவம்பர் மாதம் முழுவதும் மாவீரர் மாதமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கனடாவிலும்,தமிழகத்திலும் சிலரால் முன் வைக்கப் பட்டுள்ளது.
கனடியத் தமிழர் பேரவையைப் பொறுத்தமட்டில் நவம்பர் மாதம் முழுவதும் நினைவு மாதமாக கடைப்பிடிக்க விரும்புபவர்கள், அப்படியே நினைவு கூறும் பட்சத்தில், மற்றவர்கள் மீது தங்கள் அபிப்பிராயத்தை வலிந்து திணிக்க்க் கூடாதென கேட்டுக்கொள்கிறது
ஜனநாயக நாட்டில் மிரட்டலா?
ஜனநாயக கோட்பாடுகளை போற்றிப் பாதுகாக்கும் கனடா நாட்டின் குடிமக்களாகிய நாம் அதற்கு முரணான அபிப்பிராயங்களை மக்கள் மீது வலிந்து திணிப்பதும், அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகள் விடுவதும், மிரட்டும் பாணியில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதும், தங்கள் கருத்துக்கு உடன்படாதவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்றும், தமிழ் தேசியத்திற்கு விரோதமானவர்கள் என்று முத்திரை குத்துவதும் ஜனநாயகக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது என்று கனடியத் தமிழர் பேரவை நம்புகிறது.
ஆதலால், இப்படியான சந்தர்பங்களில் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்துவதை தவிர்த்து எல்லோருடைய ஜனநாயக உரிமைகளையும் தனி நபர் சுதந்திரத்தையும் மதித்து அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கனடியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது," என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தொடர்புகளுக்கு பேரவையின் செய்தித்தொடர்பாளர் டேவிட் பூபாலபிள்ளையை [email protected]. என்ற இமெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
வரும் 2013 ம் ஆண்டு ஃபெட்னா விழாவை கனடியத் தமிழர் பேரவைதான், முதன் முறையாக கனடாவில் நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications