ரொம்ப நல்லவருங்க கேஜ்ரிவால்... சொல்கிறார் அன்னா

அட அன்னா ஹஸாரே என்று மக்கள் ஆச்சரியப்பட்டுப் போய் நின்ற காலம் போய், என்னா ஹஸாரே என்று ஒருவிதமான அதிருப்தியோடு கேட்கும் காலம் வந்து விட்டது. இப்போது முன்பு போல அன்னாவின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தர முன்வருவதில்லை.
அதேசமயம், அன்னாவுடன் ஒருயில் ஈருடலாக இணைந்திருந்து பின்னர் அரசியல் பாதைக்காக பிரிந்து போய் விட்ட அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் மட்டும் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசி வருகிறார்.
இந்தப் பின்னணியில் குவஹாத்திக்கு வந்த அன்னா ஹஸாரே, கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவர் பேசுகையில்,
எனது பாதையும், கேஜ்ரிவாலின் பாதையும் வெவ்வேறாக இருந்தாலும், எங்கள் இலக்கு ஒன்றுதான். நாங்கள் எங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள மாட்டோம். அரவிந்த் கேஜ்ரிவாலை நான் ஆதரிக்கிறேன். அவரையும், அவரை போன்ற நல்லவர்களையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறு மக்களை கேட்டுக் கொள்வேன்.
நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. அரசியலில் நிகழும் தவறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். தேவைப்பட்டால், மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன். ஜனலோக்பால் சட்டம் வரும் வரை ஓயமாட்டேன். இந்த போராட்டம் 20 ஆண்டுகள் கூட நடக்கலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications